செய்திகள்
கொரானா உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 52 பேர் பலி

Published On 2021-05-15 01:46 GMT   |   Update On 2021-05-15 01:46 GMT
நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிராவில் இதுவரை 52 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியாகி உள்ளதாக மாநில சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மும்பை :

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் “மியூக்கோர்மைகோசிஸ்” என்ற கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளாகி வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் அல்லது கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொண்டதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாக கூறப்படுகிறது.

இந்த நோய் பாதிப்பு அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. தலைவலி, காய்ச்சல், சைனஸ் மண்டலத்தில் பாதிப்பு, கண்களுக்கு கீழ் வலி மற்றும் பகுதியளவில் பார்வை குறைபாடு ஏற்படுவது போன்றவை இந்த பூஞ்சை பாதிப்புக்கு முக்கிய அறிகுறியாகும்.

இந்தநிலையில் நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிராவில் இதுவரை 52 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியாகி உள்ளதாக மாநில சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருப்பு பூஞ்சை நோய்க்கு உயிரிழந்தவர்கள் அனைவரும் அதற்கு முன்னதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும், கொரோனா தொடங்கிய கடந்த ஆண்டு முதல் இதுவரை மேற்கண்டவர்கள் பலியாகி உள்ளனர் எனவும் அவர் கூறினார். எனினும் கடந்த ஆண்டில் சிலர் மட்டுமே பலியான நிலையில், இந்த ஆண்டில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் குறைந்தது 8 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒரு கண் பார்வையை இழந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே, ‘‘மாநிலம் முழுவதும் சுமார் 1,500 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 1 லட்சம் அம்போட்டெரிசின் - பி பூஞ்சை எதிர்ப்பு மருந்து வாங்க டெண்டர் கோரப்படும்’’ என்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News