செய்திகள்
சபரிமலை சன்னிதானத்தில் அய்யப்பனை தரிசிக்க செல்லும் 18-ம் படி மூடப்பட்டிருக்கும் காட்சி.

சபரிமலையில் அன்னதான மண்டபத்தில் 3-வது மாடி கட்ட தடை

Published On 2019-10-08 05:22 GMT   |   Update On 2019-10-08 05:22 GMT
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அன்னதான மண்டபத்தில் 3-வது மாடி கட்ட அனுமதிக்க இயலாது என்று வனத்துறை அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் பம்பையில் உள்ள பெரியார் புலிகள் சரணாலயம் அமைந்துள்ள காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு திருவிழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க பல்வேறு திட்டங்களை சபரிமலையில் மேற்கொண்டு வருகிறது.

பக்தர்கள் வசதிக்காக நிறைவேற்றும் திட்டங்களுக்கு கோவில் அமைந்துள்ள பகுதியில் கூடுதலாக 13½ ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறியது. இந்த இடத்தை ஒதுக்கி தரும்படி வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தது. பல்வேறு காரணங்களுக்காக நிலம் வழங்குவது தள்ளிப்போனது.

இந்த நிலையில் வனத்துறை சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 13½ ஏக்கர் நிலம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அங்கு வளர்ச்சிப்பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையே சபரிமலை சன்னிதான பகுதியில் பக்தர்கள் உணவு அருந்த தேவசம் போர்டு சார்பில் 3 அடுக்கு அன்னதான மண்டபம் கட்டப்பட்டு வந்தது. இதில் 2 மாடிகள் கட்டப்பட்டு விட்டன.

3-வது மாடியை விரைவில் கட்டி முடித்து அன்னதான மண்டபத்தை திறக்க தேவசம் போர்டு நடவடிக்கை எடுத்தது. இதற்காக 3-வது மாடி கட்டுவதற்கான அனுமதியை கோரி இருந்தது. வனத்துறை அதிகாரிகள் 3-வது மாடி கட்ட அனுமதி வழங்கவில்லை.

பம்பை காட்டுப்பகுதியில் சபரிமலை சன்னிதானம் அருகே அன்னதான மண்டபத்தில் 3-வது மாடி கட்டப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்றும், எனவே அங்கு 3-வது மாடி கட்ட அனுமதிக்க இயலாது என்றும் கூறி உள்ளது. வனத்துறை அனுமதி கிடைக்காததால் அன்னதான மண்டபத்தின் 3-வது மாடி கட்டும் பணிகள் முடங்கி உள்ளன. 

Tags:    

Similar News