செய்திகள்
ராகுல் காந்தி

ஜம்மு காஷ்மீரின் கலாசாரத்தை உடைக்க பாஜக-ஆர்எஸ்எஸ் முயற்சி -ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2021-09-10 15:55 GMT   |   Update On 2021-09-10 15:55 GMT
ஜம்முவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காஷ்மீருக்கும் தனது குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறினார்.
ஜம்மு:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஜம்முவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான நேற்று கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோவிலில் தரிசனம் செய்தார். வைஷ்ணவி தேவி கோவில் புனித பயணத்துக்கான மலை அடிவார முகாம் அமைந்துள்ள கத்ராவை அடைந்து, அங்கிருந்து பாதயாத்திரையாகவே கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

இரண்டாம் நாளான இன்று ஜம்முவில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக தாக்கினார். 

“காஷ்மீர் வருவது எனக்கு சொந்த வீட்டிற்கு வருவது போல் உள்ளது. எனது குடும்பத்திற்கும், காஷ்மீருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. உங்கள் மத்தியில், அன்பு, சகோதரத்துவம், கலப்பு கலாசாரம் நிலவி வருகிறது. இந்த கலாசாரத்தை உடைக்க வேண்டும் என பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் முயற்சிக்கின்றன. உங்கள் அன்பு மற்றும் சகோதரத்துவம் மீது தாக்குதல் நடத்துகின்றன. நீங்கள் பலவீனமடைந்ததன் காரணமாக மாநில உரிமையை மத்திய அரசு பறித்துக்கொண்டது” என்றார். 
Tags:    

Similar News