ஆன்மிகம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

Published On 2021-08-11 02:39 GMT   |   Update On 2021-08-11 02:39 GMT
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் அதிகமாக வந்து அம்மனை வழிப்படுவர்.
ஆண்டுதோறும் ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் கோவில்களில் கஞ்சி, கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் மற்றும் 2-வது செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் கோவில்களுக்கு திரளான பக்தர்கள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 1-ந் தேதி முதல் 3 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் கடந்த செவ்வாய்க்கிழமை அம்மனை தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையான நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

நாகர்கோவில் புலவர்விளை முத்தாரம்மன் கோவிலில் ஏராளமான பெண் பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் அதிகமாக வந்து அம்மனை வழிப்படுவர். நேற்று ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண் பக்தர்கள் குவிந்து அம்மனை வழிபட்டனர்.

ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா நடைபெறும். தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக கொடைவிழா ரத்து செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு மட்டும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இதுபோல், செண்பகராமன்புதூர் அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவில், முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில், ஆரல்வாய்மொழி தாணுமாலயன் புதூரில் உள்ள பேச்சியம்மன் கோவில், ஆரல்வாய்மொழி துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோவில், இலங்கை மாகாளியம்மன் கோவில், குட்டி குளத்து இசக்கி அம்மன் கோவில், சோதனைச்சாவடி அருகே உள்ள உச்சினிமாகாளி அம்மன் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
Tags:    

Similar News