செய்திகள்
கொள்ளை

அன்னூர் அருகே கட்டிட தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

Published On 2021-08-29 10:25 GMT   |   Update On 2021-08-29 10:25 GMT
கோவை அன்னூர் அருகே கட்டிட தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை அன்னூர் பொன்னிகவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் இவான்செல்லி(வயது 52). கட்டிட தொழிலாளி.

இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நாகர்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். அங்கு திருமண நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நேற்று கோவைக்கு வந்தார்.

வீட்டிற்கு வந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது அறையில் இருந்த பீரோவில் இருந்து ரூ. 25 ஆயிரம் ரொக்க பணம் மாயமாகி இருந்தது. இவர் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து இவான்செல்லி அன்னூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News