செய்திகள்
ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு கூட்டு வட்டி தள்ளுபடி -மத்திய அரசு அறிவிப்பு
2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு கூட்டு வட்டி தள்ளுபடி செய்யும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:
கொரோனா தொற்று பரவலால் தொழில் நிறுவனங்கள் முடங்கி, ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்ததால், அதனை கருத்தில் கொண்டு கடன் தவணைகள் மார்ச் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை 6 மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், இந்த 6 மாத காலத்திற்கு வங்கிகள் வட்டிக்கு வட்டி (கூட்டு வட்டி) விதித்தன.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, கடன்பெற்றவர்களின் நலனை கருத்தில் கொண்டு ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கான கூடுதல் வட்டியை (கூட்டு வட்டி) தள்ளுபடி செய்ய முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
இந்த புதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ், மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு கூட்டு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. வீட்டுக்கடன், சிறுகுறு தொழில் நிறுவன கடன்கள், கிரெட்டி கார்டு, கல்வி மற்றும் தனிநபர் கடன்களுக்கு கூடுதல் வட்டி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ளது.