செய்திகள்
தற்கொலை

கோவையில் குடும்பம் நடத்த பணம் இல்லாததால் புதுமாப்பிள்ளை தற்கொலை

Published On 2020-09-19 07:13 GMT   |   Update On 2020-09-19 07:13 GMT
கோவையில் திருமணமான 8 நாளில் குடும்பம் நடத்த பணம் இல்லாததால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அகில்பிகு (வயது24). இவர் கடந்த சில ஆண்டுகளாக கோவையில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முகநூல் மூலமாக அசாம் மாநிலத்தை சேர்ந்தவரும், கோவை கீரணத்தத்தில் வசித்து வந்த அனிதா (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த 10-ந்தேதி பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் அனிதா தனது வீட்டுக்கு சென்றார். 

இதை அறிந்த அனிதாவின் பெற்றோர் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பற்றி அனிதா தனது கணவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அனிதா கடந்த 14-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அகில்பிகு, அனிதா ஆகியோர் ராமநாதபுரம் ராமலிங்கஜோதி நகரில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினர். 

இந்த நிலையில் அவர்கள் குடும்பம் நடத்த பணம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் அவர்கள் 2 பேரும் தூக்குப்போட்டு கயிற்றில் தொங்கினர். கயிறு கழுத்தை இறுக்கிய நிலையில் அனிதா உயிர்பயத்தில் அருகில் இருந்த நாற்காலியில் கால் வைத்து கீழே இறங்கி தப்பினார். பின்னர் அவர் தூக்கு கயிற்றில் உயிருக்கு போராடிய தனது காதல் கணவரை மீட்க முயன்றார். மேலும் அவர், வெளியே சென்று அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடினார். ஆனால் அவர்கள் வருவதற்குள் கயிறு இறுகியதால் அகில்பிகு பரிதாபமாக இறந்தார். அதை பார்த்து அனிதா கண்ணீர் விட்டு கதறி அழுதார். இது குறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News