அரசும், வங்கிகளும் ஆக்சிஜன் உற்பத்திக்கு உதவ வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக மத்திய அரசு துரிதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வெளிநாட்டில் இருந்தும் இந்தியாவிற்கு பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வர தொடங்கி இருக்கிறது. இருப்பினும் இந்தியாவில் ஆக்கிஜன் தட்டுப்பாடே இல்லை என்று நிலை உருவாக வேண்டும். மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.
மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்கள் ஒருபுறம் இருந்தாலும், வீட்டிலேயே ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது.
எனவே தமிழகத்தில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவனம் போன்ற தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் ஆக்சிஜன் தயாரிப்பில் உடனடியாக ஈடுபட வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகளும், வங்கிகளும் உரிய வழிகாட்டுதலோடு துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.