ஆன்மிகம்
ராமநாத சுவாமி கோவில் அக்னி தீர்த்தம்

பாவம் அகற்றும் அக்னி தீர்த்தம்

Published On 2019-12-16 04:57 GMT   |   Update On 2019-12-16 04:57 GMT
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயத்தின் முன்புள்ள கடல் தீர்த்தம், ‘அக்னி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள், அக்னி தீர்த்தத்தில் மூழ்கி, தங்களை பாவமற்றவர்களாக மாற்றிக்கொள்கிறார்கள்.
தென் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவிலேயே மிகவும் புண்ணியம் மிகுந்த தீர்த்த தலங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் இருக்கிறது. இங்கு ராமநாத சுவாமி ஆலயத்தின் முன்புள்ள கடல் தீர்த்தம், ‘அக்னி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

ராமனின் மனைவி சீதாதேவி, இலங்கை மன்னன் ராவணனால் கவந்து செல்லப்பட்டாள். அவள் அங்கு அசோகவனத்தில் பல காலம் சிறைபடுத்தப்பட்டாள். மிகப்பெரிய யுத்தத்திற்குப் பிறகு, ராவணனிடம் இருந்து தன் மனைவியை ராமன் மீட்டார்.

‘இவ்வளவு நாள் இலங்கையில் இருந்தவள், கற்புடன்தான் இருக்கிறாளா? என்று ஊரார் எண்ணக்கூடாது. அதனால் தன் மனைவி மனம் கலங்கிவிடக்கூடாது’ என்று நினைத்த ராமன், தன் மனதை கல்லாக்கிக் கொண்டு, சீதாதேவியை அக்னியில் இறங்கும்படி உத்தரவிட்டார்.

சீதாதேவி இதற்காக கலங்கிப்போகவில்லை. அவளுக்கு, தன் கணவனின் மனதை அறியும் சக்தி இருந்தது. அவளுக்கு ராமனின் சொல்தான் வேதம். உடனடியாக லட்சுமணனை அழைத்த சீதாதேவி, அங்கே ஒரு அக்னி குண்டம் தயார் செய்யச் சொன்னாள். அவன் மனம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை; தயங்கி நின்றான்.

அதைக் கண்ட சீதாதேவி, “லட்சுமணா! உன் தாய் சொன்னது உனக்கு நினைவில்லையா? என்னையும் உன் தாயைப் போல பார்த்துக் கொள்ளும்படி கூறியிருந்தார். அந்த தாய் ஸ்தானத்தில் இருந்து உத்தரவிடு கிறேன். அக்னியை மூட்டு” என்றார்.

லட்சுமணனுக்கு வேறு வழியில்லை. கட்டைகளை எடுத்து வந்து ஓரிடத்தில் அடுக்கி அக்னி வளர்த்தான்.

அந்த அக்னிக்குள் இறங்கிய சீதாதேவி, “ஏ.. அக்னி தேவனே! நான் கற்புடையவள் என்பதை, இத்தனை பேர் முன்னிலையிலும் நிரூபித்துக் காட்டு” என்றாள்.

அனைவரும் வணங்கும் மகாலட்சுமியின் சொரூபம் கொண்டவள், தனக்குள் இறங்குவதை நினைத்து அக்னிக்கு மகிழ்ச்சி. ஐஸ்வரியம் படைத்த மகாலட்சுமியின் ஸ்பரிசம் பட்டதால், அக்னி தேவன் குளிர்ந்து போனான். தேவனின் வடிவம் கொண்டு, சீதாதேவியை தன் கைகளில் ஏந்தியபடி அக்னியில் இருந்து வெளிவந்தான். அவளை ராமனிடம் கொடுத்து, “தர்மபத்தினியான இவளை, என்னால் எரிக்க முடியாது” என்று கூறி மறைந்தான்.

ராமேஸ்வரம் கடற்கரையில் இந்த அற்புதம் நிகழ்ந்ததால், அக்னியின் பெயரே இந்த தீர்த்தத்திற்கு அமைந்து விட்டது. சீதாதேவி எப்படி அக்னியில் மூழ்கி, தன்னை சுத்தமானவளாக நிரூபித்தாளோ, அதுபோல் இங்கு வரும் பக்தர்கள், அக்னி தீர்த்தத்தில் மூழ்கி, தங்களை பாவமற்றவர்களாக மாற்றிக்கொள்கிறார்கள்.
Tags:    

Similar News