ஐ.பி.எல்.லில் அதிக அரைசதம்: கோலி, ரோகித்தை சமன் செய்த ரெய்னா
மும்பை:
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் சிறந்த வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை.
இந்த ஐ.பி.எல்.சீசனில் ரெய்னாவின் தொடக்கமே அதிரடியாக இருந்தது. டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் சிறப்பாக விளையாடி 36 பந்தில் 54 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரி, 4 சிக்சரும் அடங்கும்.
194-வது ஆட்டத்தில் 190-வது இன்னிங்சில் விளையாடிய ரெய்னாவுக்கு இது 39-வது அரைசதமாகும்.
இதன்மூலம் ரெய்னா ஐ.பி.எல். போட்டியில் அதிக அரைசதம் அடித்த வீரர்களில் 3-வது இடத்தில் இருந்த விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை சமன் செய்தார். விராட் கோலி 185 இன்னிங்சிலும், ரோகித் சர்மா 196 இன்னிங்சிலும் தலா 39 அரைசதம் அடித்துள்ளனர்.
ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ரெய்னா தற்போது 2-ம் இடத்தில் உள்ளார். அவர் விராட் கோலிக்கு அடுத்தபடியாக 5,422 ரன் எடுத்துள்ளார். விராட் கோலி 5,911 ரன்னுடன் முதல் இடத்தில் உள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் 38 அரைசதத்துக்கு மேல் அடித்த வீரர்கள் வருமாறு:-
1.வார்னர்- 48 (142 இன்னிங்ஸ்)
2.தவான்- 42 (176)
3.விராட் கோலி- 39 (185)
4.ரெய்னா- 39 (190)
5.ரோகித்சர்மா- 39 (196)
6.டிவில்லியர்ஸ்- 38 (157)