வழிபாடு
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திரபெருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-02-15 07:37 GMT   |   Update On 2022-02-15 07:37 GMT
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19-ந்தேதி திருக்கல்யாணமும், 21-ந்தேதி தேரோட்டமும், 24-ந்தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் காசிக்கு இணையான 5 கோவில்களில் முதன்மையானது ஆகும். நவகிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார தலமாகவும் விளங்குகிறது. ஆதி சிதம்பரம் என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் நடராஜர் சபையில் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் சிவனின் 3 கண்களில் இருந்து தோன்றிய 3 பொறிகள் விழுந்து சூரியன், சந்திரன் மற்றும் அக்னி என பெயரில் 3 குளங்கள் உள்ளது.

இந்த கோவிலில் பெற்றோர்கள் உலகத்தின் தலைவனான ருத்ரனின் பாதம் அமைந்துள்ளது. இந்த பாதத்தில் மூதாதையர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டால் 27 தலைமுறைகளில் செய்த பாவங்கள் விலகுவதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் இந்திர பெருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு கொடிமரம் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மேளதாளம் முழங்க கோவில் அர்ச்சகர் ராஜப்பா சிவாச்சாரியார் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி முருகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) மருத்துவாசுரனை அகோரமூர்த்தி சாமி வதம் செய்யும் நிகழ்ச்சியும், 19-ந் தேதி இரவு திருக்கல்யாணமும், 21-ந் தேதி காலை தேரோட்டமும், 24-ந் தேதி இரவு தெப்ப உற்சவமும் நடக்கிறது.
Tags:    

Similar News