செய்திகள்
கைது

கோழிகளை வி‌ஷம் வைத்து கொன்ற வாலிபர் கைது

Published On 2021-02-22 09:28 GMT   |   Update On 2021-02-22 09:28 GMT
ஆரல்வாய்மொழி அருகே 6 ஆயிரம் கோழிகளை வி‌ஷம் வைத்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:

துவரங்காடு அருகே காஞ்சிரங்கோட்டைச் சேர்ந்தவர் சுரேஷ்(வயது31). மார்த்தாலைச் சேர்ந்தவர் ராஜன். இவர்கள் இருவரும் செண்பகராமன்புதூர் பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளனர்.

கோழிப்பண்ணையில் கோழிகள் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டது. சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கோழிகளை வி‌ஷம் வைத்து கொன்றது பூதப்பாண்டி மத்தியாஸ் நகரைச் சேர்ந்த ஷாஜன்(32) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரை தேடினார்கள். ஷாஜனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் செல்போன் டவர் உதவியுடன் ஷாஜன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.

சென்னையில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

நான் சுரேஷின் கோழிப்பண்ணையில் வேலை பார்த்தேன். என்னை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நிறுத்தி விட்டனர். வேலை இல்லாமல் சுற்றித்திரிந்தேன். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு போலீசார் வழக்கு ஒன்று தொடர்பாக என்னை கைது செய்தனர்.

இதற்கு சுரேஷ் தான் காரணம் என்று எண்ணினேன். சுரேஷ் என்னை வாழ விட மாட்டார் என்று எண்ணி அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். சம்பவத்தன்று சுரேசின் வீட்டிற்குச் சென்றேன். வீட்டில் சுரேஷ் இல்லை. இதனால் கோழிப்பண்ணைக்கு வந்து சுரேசை விசாரித்தேன். அங்கிருந்தவர்கள் அவர் இல்லை என்று கூறினார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான் கோழிகளுக்கு வி‌ஷம் வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டேன். சென்னை உள்பட பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த என்னை போலீசார் பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News