செய்திகள்
கோப்புபடம்

வெண்பட்டுக்கூடுகளுக்கு விலை உயர்வால் பட்டுப்புழு வளர்ப்பு தொழில் புத்துயிர் பெற வாய்ப்பு

Published On 2021-09-18 07:45 GMT   |   Update On 2021-09-18 07:45 GMT
சட்டசபை மானியக்கோரிக்கையில் பட்டு வளர்ச்சித்துறை மேம்பாட்டுக்காக பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
உடுமலை:

உடுமலை சுற்றுப்பகுதியில் பட்டுக்கூடுகள் உற்பத்திக்காக 3 ஆயிரம் ஏக்கர் வரை விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்துள்ளனர். தமிழகத்தில் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில் உடுமலை பகுதி முன்னிலையில் உள்ளது.

விவசாயம் சார்ந்த இத்தொழிலில் ஈடுபட பல விவசாயிகள் ஆர்வம் காட்டிய நிலையில் வெண்பட்டுக்கூடுகளின் விலை கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிலையில்லாமல் பாதிப்பை ஏற்படுத்தியது.

மேலும் இத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் எவ்வித புதிய மானியத் திட்டங்களும் போதியளவு செயல்படுத்தப்படவில்லை. தொழிலில் தொடர் பாதிப்புகளால் மல்பெரி செடிகளை விளைநிலங்களில் இருந்து அகற்றும் நிலைக்கு சில விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு வெண்பட்டுக்கூடுகளின் விலை அரசு கொள்முதல் மையங்களில் கிலோ 500 ரூபாயை தாண்டி 568 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்து விலை சரிவால் சோர்வடைந்திருந்த விவசாயிகளுக்கு, தற்போதைய விலையேற்றம் ஆறுதல் அளித்துள்ளது.

சட்டசபை மானியக் கோரிக்கையில் பட்டு வளர்ச்சித்துறை மேம்பாட்டுக்காக பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. புழு வளர்ப்பு மனை அமைக்க மானியம், ரூ.87 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல் 200 முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு பவர் டில்லர் எந்திரம் வாங்க ரூ.35 ஆயிரம் ஒதுக்கீடு, சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு, உயர் விளைச்சல் தரும் மல்பெரி நடவு செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கத்தை விட  மானியத் திட்டங்கள் குறைவாக இருந்தாலும் தொய்விலுள்ள தொழிலுக்கு மானியத் திட்டங்களால் சிறு மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். இத்திட்டங்களில் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில் முன்னிலையில் உள்ள உடுமலை பகுதிக்கு முக்கியத்துவம் வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

உடுமலை பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான அரசு கொள்முதல் மையம் மைவாடியில் ஓராண்டுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. 

பட்டு வளர்ச்சித்துறை சார்பில் தர்மபுரி, சேலம், கோவை, ஒசூர் ஆகிய அரசு கொள்முதல் மையங்களில் பட்டுக்கூடுகளுக்கு கிடைக்கும் விலை நிலவரம், நாள்தோறும் அத்துறையின் இணையதளத்தில்  ‘அப்டேட்’ செய்யப்படுகிறது. இப்பட்டியலில் மைவாடி கொள்முதல் மையம் சேர்க்கப்படவில்லை. 

இதனால் உள்ளூர் விலை நிலவரம் தெரிந்து கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிக்கின்றனர். எனவே மைவாடி கொள்முதல் மைய விலை நிலவரத்தையும் ‘அப்டேட்’ செய்ய கோவை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News