செய்திகள்
சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2019-09-11 18:03 GMT   |   Update On 2019-09-11 18:03 GMT
சிவகங்கையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக்கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை:

சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியிட மாறுதல் மற்றும் குறிப்பாணை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான நாகராஜ் தலைமை தாங்கினார். சங்க பொதுச்செயலாளர் சங்கர், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் சேதுசெல்வம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளருமான ரவிச்சந்திரன் மீதான தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், இடைநிலை ஆசிரியர் மாவட்ட தலைவர் தவமணிசெல்வம் மற்றும் பல்வேறு சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News