செய்திகள்
கோப்புபடம்

வாணியம்பாடியில் கணவர் இறந்த சில நிமிடங்களில் மனைவியும் பலி - கணவர் உடல் மீது சாய்ந்தபடி உயிர் பிரிந்தது

Published On 2021-04-30 10:28 GMT   |   Update On 2021-04-30 10:28 GMT
வாணியம்பாடியில் சாவிலும் பிரியாமல் முதியோர் தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி ரோடு செங்குந்தர் மண்டபம் அருகே உள்ள குடியிருப்பை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 78). இவரது மனைவி லட்சுமியம்மாள்(65). தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அண்ணாமலை ஜவுளி வியாபாரம் செய்துவந்தார்.

கடந்த வாரம் அண்ணாமலை சைக்கிளில் வெளியே சென்ற போது தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை திடீரென அண்ணாமலை இறந்தார். இந்த தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

அண்ணாமலையின் உடல் மீது சாய்ந்தபடி லட்சுமி அம்மாள் அழுது புரண்டார். திடீரென அவரது அழுகை நின்றது. இதனால் உறவினர்கள் அவரை தொட்டு தூக்கினர். அப்போது அவரும் இறந்தது தெரியவந்தது.

அண்ணாமலை இறந்த 10 நிமிடத்தில் லட்சுமி அம்மாளும் இறந்தார். கணவர் உடல் மீது சாய்ந்த படியே அவருடைய உயிர் பிரிந்தது.

இருவரது உடலையும் அடக்கம் செய்ய அவர்களது உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். சாவிலும் பிரியாமல் முதியோர் தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News