செய்திகள்
உயிரிழந்த பெண் தாசில்தார்

தெலுங்கானா மாநிலத்தில் பெண் தாசில்தார் எரித்து கொல்லப்பட்டது எப்படி? புதிய தகவல்கள்

Published On 2019-11-05 06:13 GMT   |   Update On 2019-11-05 06:13 GMT
தெலுங்கானா மாநிலத்தில் பெண் தாசில்தார் விஜயா ரெட்டி கொலை செய்யப்பட்டது எப்படி? ஏன் எரித்துக் கொல்லப்பட்டார்? என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நகரி:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ரங்கா ரெட்டி மாவட்டம் உள்ளது. இங்குள்ள அப்துல்லா பூர்மெட் என்ற இடத்தில் பணிபுரிந்த தாசில்தார் விஜயா ரெட்டி, நேற்று அவரது அலுவலக அறையில் எரித்து கொலை செய்யப்பட்டார்.

தாசில்தார் விஜயா ரெட்டி கொலை செய்யப்பட்டது எப்படி? ஏன் எரித்துக் கொல்லப்பட்டார்? என்பது பற்றிய புதிய தகவல்கள்வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

ஹயத்நகர் மண்டலத்தில் உள்ள காரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (30). இவருக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம் வேறு ஒருவர் பெயரில் பட்டா போடப்பட்டதாக கூறப்படுகிறது.

அதை தனது பெயருக்கு மாற்றம் செய்து தர வேண்டும் என்று தாசில்தார் விஜயா ரெட்டியிடம் சுரேஷ் பலமுறை கோரிக்கை வைத்தார்.

தாசில்தாரை பலமுறை சந்தித்து பேசியும் சுரேஷ் பெயரில் நிலத்தை மாற்றுவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் என் நிலத்தை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றிய அதிகாரிகள் தண்டனை அனுபவிப்பார்கள் என்று கூறி வந்தார்.

இந்த நிலையில், நேற்று மதியம் 1.30 மணிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தாசில்தார் அலுவலகத்துக்கு சுரேஷ் வந்துள்ளார்.

மதிய இடைவேளை நேரம் என்பதால் தாசில்தார் விஜயா ரெட்டி தனியாக உட்கார்ந்து இருந்தார். அவரிடம் தனது நிலம் வேறு ஒருவர் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டது பற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சுமார் அரை மணி நேரம் இந்த வாக்குவாதம் நடந்துள்ளது.

தனது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தாசில்தாரை தீர்த்துக் கட்டுவது என்ற முடிவில் வந்த சுரேஷ், தான் கொண்டு வந்த தோள்பையில் ஒரு பிளாஸ்டிக் கேனில் பெட்ரோலை மறைத்து கொண்டு வந்துள்ளார்.

வெட்டிக் கொன்றால் யார் என்பது தெரிந்து விடும். எனவே, பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு மின் கசிவில் தீப்பிடித்தது என்று கூறி தப்பித்து விடலாம் என்று சுரேஷ் முடிவு செய்துஇருக்கிறார்.

அதன்ப, சுரேஷ் தாசில்தார் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். தாசில்தார் விஜயாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது கார் டிரைவரும், பியூனும் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் சுரேஷ் கதவை பூட்டிக் கொண்டார்.



எனவே டிரைவரும், பியூனும் அறை கதவை உடைக்க முயற்சி செய்தனர். இதற்குள் அறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. சுரேஷ் சட்டையிலும் தீப்பிடித்துக் கொண்டது. உடனே கதவை திறந்த அவர் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துக் கொண்டது என்று கூறியபடி வெளியே வந்தார்.

தீப்பற்றி எரிந்த தனது சட்டையை கழற்றிவீசி விட்டு வேகமாக வெளியே ஓடினார்.

தீப்பற்றி எரிந்த நிலையில் தாசில்தார் விஜயா ரெட்டி அறை வாசலில் வந்து விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற டிரைவர், பியூன் இருவரும் தீக்காயம் அடைந்தனர். இதற்குள் தாசில்தார் உடல் கருகி அதே இடத்தில் மரணம் அடைந்தார். தீ வைத்த சுரேஷ் தீக்காயங்களுடன் தாலுகா அலுவலகத்தின் அருகில் இருந்த போலீஸ் நிலையம் முன்பு விழுந்தார்.

சுரேஷ் 60 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக ஹயாத் நகர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தீக்காயம் அடைந்த டிரைவர், பியூன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விஜயா ரெட்டியின் உடல் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவரது சொந்த ஊரான நல்கொண்டா மாவட்டம் வாலார கிராமத்துக்கு கொண்டு போகப்பட்டது. உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த சம்பவத்தையடுத்து பல்வேறு அரசு அதிகாரிகள் தாலுகா அலுவலகம் முன்பு குவிந்தனர். தங்களுக்கு நீதி வேண்டும் என்ற வலியுறுத்திதர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய சரித்திரத்திலேயே இதுபோன்ற சம்பவம் இதுவரை நடந்தது இல்லை. பணிக்கு சென்றால் உயிரோடு வீடு திரும்புவோமா என்று பயமாக உள்ளது.

எனவே நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று மாநில தாசில்தார் சங்க தலைவர் கவுதம் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மந்திரி சபிதா இந்திரா ரெட்டி ஆஸ்பத்திரிக்கு சென்று தாசில்தார் விஜயா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் தாசில்தாரை எரித்து கொன்ற சுரேஷ் மனநிலை சரி இல்லாதவர் என்று அவரது தாயார் பத்மா போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் போலீசார் அதை ஏற்கவில்லை. ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று, தாசில்தாரை தீ வைத்து எரித்து சுரேஷ் கொலை செய்து இருக்கிறார்.

இது திட்டமிட்ட கொலைதான். மின்கசிவு என்று பொய் சொல்லி தப்பிக்க முயன்று இருக்கிறார். எனவே சுரேஷ் திட்டமிட்டு தாசில்தாரை கொலை செய்தது உறுதியாக உள்ளது என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

தாசில்தார் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அரசு ஊழியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Tags:    

Similar News