செய்திகள்
குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்திருந்ததை காணலாம்

புதுவையில் தொடர் மழையால் 51 ஏரிகள் நிரம்பின- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2020-12-05 02:17 GMT   |   Update On 2020-12-05 02:17 GMT
புதுவையில் பெய்த தொடர் மழையால் 51 ஏரிகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி:

மரக்காணம் அருகே நிவர் புயல் கரையை கடந்ததையொட்டி கடந்த 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை புதுவையில் பலத்த மழை பெய்தது. ஒரே நாளில் 30 செ.மீ. மழை பதிவானது. அப்போது மாநிலம் முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த சுவடு மறைவதற்குள் அடுத்ததாக வந்த புரெவி புயலால் கடந்த 3 நாட்களாக மழை பெய்தது.

புதுவையில் மொத்தம் 84 ஏரிகள் உள்ளன. தற்போது மழை பெய்து வருவதையொட்டி நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி 51 ஏரிகள் நிரம்பியுள்ளன. இதில் புதுச்சேரியில் மிகப்பெரிய ஏரியான ஊசுடு ஏரி 11.51 அடி உயரம் கொண்டது. இந்த ஏரியின் நீர்மட்டம் தற்போது 9.12 அடியை எட்டியுள்ளது. 9.84 அடி உயரம் கொண்ட பாகூர் ஏரியின் நீர்மட்டம் தற்போது 8.13 அடியாக உள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஏரிகள் நிரம்பி விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி, சேதராப்பட்டு, துத்திப்பட்டு, கரசூர், அபிஷேகப்பாக்கம் உள்பட 51 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதையொட்டி ஏரிகளில் இருந்து உபரிநீராக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே வாய்க்கால்களை யொட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீதம் உள்ள 33 ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags:    

Similar News