செய்திகள்
பரத்

அஞ்செட்டி அருகே காவிரி ஆற்றில் சுழலில் சிக்கி மருத்துவக்கல்லூரி மாணவர் பலி

Published On 2021-04-08 13:38 GMT   |   Update On 2021-04-08 13:38 GMT
அஞ்செட்டி அருகே நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளித்த போது மருத்துவக் கல்லூரி மாணவர் சுழலில் சிக்கி இறந்தார்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் பரத் (வயது 24). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் இறுதிஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பரத் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க அஞ்செட்டி வந்து இருந்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் அவர் அங்குள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர், நண்பர்கள் 5 பேருடன் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக தப்பகுளி என்ற இடத்திற்கு சென்றனர். நண்பர்கள் 6 பேரும் ஆற்றில் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது பரத் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு நீந்தி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் எதிர்பாராதவிதமாக காவிரி ஆற்றில் சுழலில் சிக்கி தத்தளித்தார். இதையறிந்த நண்பர்கள், அக்கம், பக்கத்தினர் உதவியுடன் பரத்தை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது பரத் இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து அஞ்செட்டி போலீசாருக்கும், மாணவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். மாணவரின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் மாணவர் பரத் காவிரி ஆற்றில் நீந்தி சென்றபோது சுழலில் சிக்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவக்கல்லூரி மாணவர் காவிரி ஆற்றில் சுழலில் சிக்கி இறந்த பரிதாப சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News