செய்திகள்
தங்கவேல் - விமலா ராணி

கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொன்று உடலை எரித்த மனைவி

Published On 2021-08-12 11:14 GMT   |   Update On 2021-08-12 11:14 GMT
கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொன்று உடலை எரித்த மனைவி போலீசில் சரண் அடைந்தார்.
படப்பை:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 44). இவருடைய மனைவி விமலா ராணி (35). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 14 வயதில் மகன் உள்ளார். இவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் உள்ள ஆத்தனஞ்சேரி பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தனர்.

தங்கவேல் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 31 -ந்தேதி தங்கவேலின் தந்தை திருமலையாண்டி (70) மற்றும் சகோதரர் சக்திவேல் (47) ஆகியோர் தங்கவேலின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். அப்போது தங்கவேலின் மனைவி போனை எடுத்து சரியான பதில் கூறாமல் போனை வைத்துள்ளார். அதன் பின்னர் சக்திவேலின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த தங்கவேலின் தந்தை திருமலையாண்டி, மகன் சக்திவேல் மற்றும் உறவினர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஆத்தனஞ்சேரி பகுதியில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளனர்.

அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டில் தங்கவேல், அவருடைய மனைவி, மகன் ஆகியோர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் மகன் தங்கவேல், மருமகள், பேரன் மாயமானதாக தங்கவேலின் தந்தை திருமலையாண்டி புகார் செய்தார். மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கவேலின் மனைவி விமலா ராணி மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து விமலா ராணியை போலீசார் கைது செய்தனர்.

பின்பு விசாரணையில் விமலா ராணி கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-

விமலா ராணிக்கும் அவருடைய கணவருக்கும் கடந்த மாதம் 28-ந் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கணவரின் கழுத்தை வெட்டி கொன்று சேலத்தை சேர்ந்த கள்ளக்காதலன் ராஜா என்பவருடன் அச்சரப்பாக்கம் அருகே வனப்பகுதியில் உடலை எரித்துள்ளார்.

விமலா ராணிக்கும் சேலம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் இந்த கொலை நடந்துள்ளது.

கடந்த 2-ந்தேதி அச்சரப்பாக்கம் அருகே எரிந்த நிலையில் கரிக்கட்டையாக உடல் கண்டெடுக்கப்பட்டது. அது தங்கவேலின் உடலா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து ராஜா மற்றும் சிலரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News