செய்திகள்
பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் - போக்சோவில் வாலிபர் கைது
வெள்ளோடு அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள வாய்ப்பாடி இளையாம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 20). இவருக்கும், பெருந்துறை பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 பேரும் காதலித்து வந்துள்ளனர்.
இதுபற்றி தெரிய வரவே மாணவியின் தாய் சக்திவேலை கண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து மாணவியை அவரது தாய் வெள்ளோடு பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி பாட்டி வீட்டில் இருந்த மாணவியை காணவில்லை. இதுபற்றி அவர் தனது மகளிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மாணவியின் தாய் தனது மகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டபோது சக்திவேலுடன் சென்னையில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக மாணவியை சென்னையில் இருந்து வரவழைத்து அவரது தாய் விசாரித்தார். அப்போது அவர் சக்திவேல் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சென்னைக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்து மாணவியின் தாய் வெள்ளோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சக்திவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து அவர் பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.