செய்திகள்
சென்னை தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசு உத்தரவு

Published On 2020-10-16 01:30 GMT   |   Update On 2020-10-16 01:30 GMT
தலைமைச் செயலகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதைத் தொடர்ந்து, பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கடந்த சில மாதங்களாக குறைந்த அளவில் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக அரசு அலுவலகங்களுக்கு 100 சதவீதம் பணியாளர்கள் வந்துகொண்டிருக்கின்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தை பொறுத்தவரை சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது தலைமைச் செயலகத்திலும் 100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வருகின்றனர். அவர்களுக்கு வசதியாக ரெயில் போக்குவரத்து சிறப்பு சேவையும் வழங்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் தொடக்கத்தில் பணியாளர்களிடையே கொரோனா தொற்று அதிகமாக காணப்பட்டது. பின்னர் தொற்று சற்று குறைந்தாக கருதப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் தலைமைச் செயலகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதாக தலைமைச் செயலக சங்கம் எச்சரித்துள்ளது. 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு அந்த சங்கம் தெரிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து ஒரே துறையில் 36 பணியாளர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. கடந்த 4 நாட்களை கணக்கிட்டால் 280 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தலைமைச் செயலக ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மூலம் மற்ற ஊழியர்கள், உடன் பயணித்தவர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என தொற்று எண்ணிக்கை உயரும் வாய்ப்பு, பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார், அனைத்து துறை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை சார்பில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்துக்கு வரும் அனைத்து பணியாளர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது.

தலைமைச் செயலக பிரதான கட்டிடம் மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் வாசல்களில் தானியங்கி சுத்திகரிப்பு எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் சில பொதுத்தளங்கள், தலைமைச் செயலக மருத்துவ சிகிச்சை மையங்கள், ஏ.டி.எம். மையங்கள் ஆகியவற்றிலும் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது கொரோனா தொற்று தலைமைச் செயலகத்தில் அதிகரித்து வருகிறது என்ற தகவல் அரசுக்கு வந்துள்ளது. எனவே, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள அனைத்து துறைகளின் செயல் அலுவலகங்களும், ஆக்ஸிஜன் அளவை சோதிக்கும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவிகள், உடல் வெப்பநிலை சோதிக்கும் கருவிகள் ஆகியவற்றை தேவையான அளவில் வாங்கி, தினமும் பணியாளர்களுக்கு சோதனைகளை மேற்கொண்டு அளவை பதிவு செய்ய வேண்டும்.

எந்த ஒரு அதிகாரியோ, அலுவலர்களோ காய்ச்சல், உயர்ந்த உடல் வெப்பநிலை, சளி, இருமல், ஆக்ஸிஜன் அளவு குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளுடன் இருந்தால், அவர்களை பரிசோதித்து அடுத்த கட்ட மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்தப் பணிகளுக்காக ஒவ்வொரு துறையின் சார்பு செயலாளர் அல்லது துணை செயலாளர் ஒருவர் பொறுப்பில் நியமிக்கப்பட்டு, தினமும் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News