செய்திகள்
பார்த்தசாரதி

தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்க வலியுறுத்துவோம்- துணை செயலாளர் பார்த்தசாரதி பேட்டி

Published On 2021-02-22 10:07 GMT   |   Update On 2021-02-22 10:07 GMT
கடந்த முறை 41 தொகுதிகளில் போட்டியிட்டோம். இம்முறையும் 41 தொகுதிகளை ஒதுக்குமாறு அதிமுகவிடம் வலியுறுத்துவோம் என்று தே.மு.தி.க. துணை செயலாளர் பார்த்தசாரதி கூறியுள்ளார்.

ஊட்டி:

ஊட்டியில் தே.மு.தி.க. சார்பில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தே.மு.தி.க. துணை செயலாளர் பார்த்தசாரதி கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து பார்த்தசாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற சட்டமன்ற தேர்தலுக்காக தே.மு.தி.க.வில் 7 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கோவை, நீலகிரியில் எனது கட்டுப்பாட்டில் நிர்வாக பணிகள் நடைபெறுகிறது. தேர்தலை எவ்வாறு சந்திப்பது, பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க.விடம் இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

கடந்த முறை 41 தொகுதிகளில் போட்டியிட்டோம். இம்முறையும் 41 தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்துவோம். தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக காத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் இன்னும் பேச அழைக்கவில்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி என்பது வதந்தி. அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணி.

4 ஆண்டுகளுக்கு பின் சசிகலா தமிழகம் வந்துள்ளார். அவர் ஒரு பெண் என்பதால் தான் வரவேற்கிறோம். மற்றபடி அ.ம.மு.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News