காரமடை பகுதிகளில் உள்ள கொரோனா பரிசோதனை முகாமில் சிறப்பு அதிகாரி திடீர் ஆய்வு
காரமடை:
கோவை மாவட்டம் காரமடை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த சில நாட்களாக கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.
நேற்று மங்களகரைப்புதூர் கிராமத்தில் நடந்த முகாமில் மாவட்ட சிறப்பு கொரோனா தடுப்பு அலுவலர் பிரசன்ன ராமசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார்.
அப்போது அவர் பணியாளர்கள் மத்தியில் பேசுகையில், தினமும் 100 பேருக்கு குறையாமல் பரிசோதனை செய்யப்பட வேண்டும். இதன் மூலம் நோய் அறிகுறி உள்ளவர்களை ஆரம்ப நிலையிலே கண்டறிய முடிவதுடன், மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் கட்டுப்படுத்த முடியும்.
பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானால் குடும்பத்தினருக்கு உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் தொடர்ந்து பரிசோதனை முகாமினை தொடர்ந்து நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது செயல் அலுவலர் சுரேஷ்குமார், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.