செய்திகள்
நச்சலூர் அருகே போலி டாக்டர் மீது வழக்கு - உதவியாளர் கைது
நச்சலூர் அருகே போலி டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவருடைய உதவியாளரை கைது செய்தனர்.
நச்சலூர்:
கரூர் மாவட்டம் நச்சலூரை அடுத்த இனுங்கூர் ஊராட்சியில் மருந்து கடை நடத்தி வருபவர் மோகன்ராஜ். இவருக்கு உதவியாக திருச்சி மாவட்டம் இனாம்புலியூரை சேர்ந்த பொன்னுசாமியின் மகன் ராஜீ(33) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர்கள் அப்பகுதியில் போலி மருத்துவம் பார்ப்பதாக, கரூர் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனருக்கு புகார் வந்தது.
அதன்பேரில் குளித்தலை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ஸ்ரீகாந்த், மண்டல கட்டுப்பாட்டு ஆய்வாளர் லெட்சுமணதாஸ், குளித்தலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாமுனி மற்றும் வருவாய் அதிகாரிகள் மருந்து கடையில் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது, மோகன்ராஜ் மருத்துவம் படிக்காமல், போலி மருத்துவ சான்றிதழை வைத்து கடந்த சில ஆண்டுகளாக அவரது மருந்து கடையில் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும், அவருக்கு உதவியாக ராஜீ இருந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே அதிகாரிகள் வருவதை கண்டதும், போலி டாக்டர் மோகன்ராஜ் மருந்து கடையின் பின்வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டார். ஆனால் அவரது உதவியாளர் ராஜீ, அதிகாரிகளிடம் சிக்கினார். அவரிடம் இருந்து ஆங்கில மருந்்து, மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து டாக்டர் ஸ்ரீகாந்த் கொடுத்த புகாரின்பேரில் மோகன்ராஜ், ராஜீ மீது சப்-இன்ஸ்பெக்டர் மகாமுனி வழக்குப்பதிவு செய்து ராஜீவை கைது செய்தார். தப்பி ஓடிய மோகன்ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.