ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது

நெல்லையப்பர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது

Published On 2020-10-19 05:29 GMT   |   Update On 2020-10-19 05:29 GMT
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. தொடர்ந்து வருகிற 25-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து வருகிற 25-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் வழக்கம் போல் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய உற்சவ மூர்த்திகள் கோவிலில் உள்ள சோமவார மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு, தினமும் பகல் 11 மணியளவில் உற்சவமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெறும்.

இரவு 7 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடைபெறும். அபிஷேகம் மற்றும் தீபாராதனை நேரங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. இதர நேரங்களில் பக்தர்கள் சோமவார மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவ மூர்த்திகளைத் தரிசிக்கவும், அங்கே வைக்கப்பட்டிருக்கும் நவராத்திரி கொலுவை பார்வையிடவும் அனுமதிக்கப்படுவார்கள்.

உற்சவமூர்த்திகளுக்கு செய்விக்கப்படும் இந்த அபிஷேகம், அலங்காரம், ஷோடச தீபாராதனைகளை பக்தர்கள் தங்களது செல்போன்கள் மற்றும் இணைவழியில் காண்பதற்கு Google play Store -ல் Nellaiappar kovil official என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பார்க்கலாம். மேலும் முந்தைய தின நிகழ்வுகளை மறுதினம் youtube Channel Nellaiappar temple Navarathiri Festival 2020 என டைப் செய்து, https://bit.ly/2VFCb4b என்ற லிங்க் மூலம் காணலாம்.

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு காந்திமதி அம்பாளுக்கு லட்சார்ச்சனை நேற்று தொடங்கியது. தொடர்ந்து வருகிற 31-ந்தேதி முடிய தினமும் மாலை 6 மணியளவில் அம்மன் சன்னதியில் வைத்து லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
Tags:    

Similar News