செய்திகள்
சித்தராமையா

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் நன்றி மறந்து பேசுகிறார்கள்: சித்தராமையா

Published On 2021-02-18 02:25 GMT   |   Update On 2021-02-18 02:25 GMT
காங்கிரஸ் கட்சி விட்டு கொடுத்ததால் தான் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் ஆட்சி அதிகாரத்துக்கு வர முடிந்தது. தற்போது அவர்கள் நன்றி மறந்து பேசுகிறார்கள் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
ஹலகூர் :

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே நேற்று காங்கிரஸ் கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மலவள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கும், கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர்களாக தேர்வானவர்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா கலந்து கொண்டார்.

அவர் கிராம பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கினார். அதேபோல் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர்களாக தேர்வானவர்களுக்கும் பாராட்டுகள் தெரிவித்து பரிசுகள் வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் - ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்தது. கூட்டணி ஆட்சியில் ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தார். துணை முதல்-மந்திரியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வர் இருந்தார். ஜனதா தளம்(எஸ்) கட்சியிடம் நிர்வாகத்தை ஒப்படைக்கவும், அவர்களுடன் கூட்டணி அமைக்கவும் நான் ஒப்புக்கொள்ளவில்லை.

ஏனெனில் அவர்கள் வெறும் 37 சட்டசபை தொகுதிகளில்தான் வெற்றிபெற்று இருந்தார்கள். ஆட்சி அமைக்க தகுதி இல்லாத இடத்தில் அவர்கள் இருந்தனர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்க உத்தரவிட்டது. கட்சி மேலிடத்தின் உத்தரவின்பேரிலேயே ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்கப்பட்டது. அதனால்தான் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் ஆட்சி நிர்வாகத்துக்கு வந்தனர். தற்போது அவர்கள் காங்கிரஸ் கட்சியை குறை கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சி விட்டு கொடுத்ததால்தான் அவர்களால் ஆட்சி அதிகாரத்துக்கு வர முடிந்தது. தற்போது அவர்கள் நன்றி மறந்து பேசுகிறார்கள்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News