தமிழ்நாடு
16 கண் மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்ட உபரிநீர் சீறிப்பாய்ந்து ஓடுவதை காணலாம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2021-12-06 04:03 GMT   |   Update On 2021-12-06 04:03 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று காலை 17 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து 25 ஆயிரத்து 400 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த மாதம் 13-ந்தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. பின்னர் கடந்த சில நாட்களாக மழை குறைந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியிலும், ஒகேனக்கல் பகுதியிலும் மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒகேனக்கலில் தற்போது 20 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வருகிறது.

இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பரிசலில் உற்சாகமாக சென்று இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை 17ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து 25 ஆயிரத்து 400 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்பி உள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த 14-ந் தேதி முதல் அப்படியே காவிரி மற்றும் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. அதன் படி இன்று அணையில் இருந்து காவிரியில் 25 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணை நீர்மட்டம் கடந்த 23 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணை கடந்த மாதம் 13-ந் தேதி இரவு 120 அடியை எட்டிய நிலையில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் அன்று நள்ளிரவு முதல் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கடந்த 10 நாட்களாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கு கீழ் குறைந்து வந்ததால் கடந்த மாதம் 28-ந் தேதி காலை முதல் 16 கண் மதகு வழியாக உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்டது. தற்போது அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரானது அணையை ஒட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 17 ஆயிரம் கன அடி வீதமும், அணையின் உபரி நீர் போக்கி 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதமும் திறந்துவிடப்பட்டது. 8 நாட்களுக்குப் பிறகு மீண்டும் 16 கண் மதகு வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



Tags:    

Similar News