செய்திகள்
69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 2 சிலைகளை மீட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு
69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தஞ்சை அழகர், திருப்புராந்தகர் சிலைகள் தஞ்சை அரண்மனை கலைக்கூடத்திலிருந்து மீட்கப்பட்டன.
தஞ்சாவூர்:
தமிழ்நாட்டிலிருந்து கடத்தப்பட்ட மிகவும் பழமையான சிலைகளை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெற்றிகரமாக மீட்டு வந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தின் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து களவாடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் மீட்டுக் கொண்டு வந்தனர்.
இதையடுத்து, ராஜராஜ சோழன் சிலையுடன் காணாமல் போன 61 சிலைகளை மீட்கும் நடவடிக்கையில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தஞ்சை ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து 69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனதாக கூறப்படும் தஞ்சை அழகர் மற்றும் திருப்புராந்தகர் சிலைகள், தஞ்சை அரண்மனை கலைக்கூடத்தில் இருப்பதாக இந்தக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், 56 கிலோ எடை கொண்ட திருப்புராந்தகர் சிலையையும், 61 கிலோ எடை கொண்ட தஞ்சை அழகர் சிலையையும் மீட்டனர். மீட்கப்பட்ட சிலைகள் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.