செய்திகள்
தமிழக அரசு

6 சாதி பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்கலாம்- தமிழக அரசு

Published On 2021-06-03 09:10 GMT   |   Update On 2021-06-03 09:10 GMT
6 சாதிப்பிரிவுகளை உள்ளடக்கியவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்னும் பொதுப்பெயரில் அழைக்கலாம் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
சென்னை:

தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன் ஆகிய 6 சாதிப்பிரிவுகளை உள்ளடக்கியவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்னும் பொதுப்பெயரில் அழைக்கலாம் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுதொடர்பாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு கடந்த ஆண்டு நவம்பர் 28-ந்தேதி தமிழக அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இதை ஆய்வு செய்த மத்திய அரசு உரிய சட்டத்திருத்தத்தை செய்தது.

இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனால் 6 சாதிப்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்கலாம் என்பது நடைமுறைக்கு வந்துள்ளது.

இதனை மாவட்ட கலெக்டர்கள், துறைத்தலைவர்கள், சான்றிதழ் வழங்க அதிகாரம் பெற்ற அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News