செய்திகள்
3-வது வழக்கிலும் போக்சோ சட்டம் பாய்ந்தது: சிவசங்கர் பாபா, நாளை மறுநாள் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்
ஒரு வழக்கில் போக்சோ சட்டம் போடப்படாமல் இருந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தங்கையிடமும் சிவசங்கர் பாபா பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை:
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக மாமல்லபுரம் மகளிர் போலீசார் முதலில் வழக்குபதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி. ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி சிவசங்கர் பாபாவை கைது செய்து 3 மாணவிகள் அளித்த புகாரின் பேரில் தனித்தனியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இதில் 2 வழக்குகள் போக்சோ சட்டத்தில் பதிவாகி இருந்தது.
ஒரு வழக்கில் போக்சோ சட்டம் போடப்படாமல் இருந்தது. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தங்கையிடமும் சிவசங்கர் பாபா பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வழக்கிலும் புதிதாக அவர் மீது மேலும் ஒரு போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
இந்த வழக்கிலும் சிவசங்கர் பாபாவை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து 3-வதாக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கிலும் சிவசங்கர் பாபாவை கைது செய்துள்ளதாக செங்கல்பட்டு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நாளை செங்கல்பட்டு கோர்ட்டு சிவசங்கர் பாபாவை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிடும் என்று தெரிகிறது. நாளை மறுநாள்
இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் புழல் சிறையில் உள்ள சிவசங்கர் பாபா, செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது புதிதாக போடப்பட்ட போக்சோ வழக்கில் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்பு உள்ளது.
இதையும் படியுங்கள்...குடிநீர் தொட்டி மீது ஏறி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள்