வழிபாடு
ஈரோடு சின்னமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம். (உள்படம் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்).

ஈரோடு சின்னமாரியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2022-03-31 05:52 GMT   |   Update On 2022-03-31 05:52 GMT
ஈரோடு சின்ன மாரியம்மன் கோவிலில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) கம்பங்களின் ஊர்வலம் நடக்கிறது. வருகிற 3-ந் தேதி நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் குண்டம் தேர்த்திருவிழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 19-ந் தேதி 3 கோவில்களிலும் கம்பங்கள் நடப்பட்டன. இதைத்தொடர்ந்து தினமும் பெண்கள் கம்பங்களுக்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.

நேற்று முன்தினம் காலையில் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். பெரிய மாரியம்மன் கோவிலில் இரவு மாவிளக்கு பூஜை நடந்தது.

ஈரோடு சின்ன மாரியம்மன் கோவிலில் நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அம்மன் எழுந்தருளிய அலங்கரிக்கப்பட்ட தேர் கோவிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வராணி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு மற்றும் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். பெரியார் வீதி, அக்ரஹாரம் வீதி வழியாக தேர் சென்றது. அப்போது இருபுறமும் பக்தர்கள் திரண்டு நின்று தேர் மீது உப்பு, பூ போட்டு வழிபட்டனர். பின்னர் அக்ரஹாரம் வீதியில் தேர் நிறுத்தப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு மீண்டும் தேர்வடம் பிடித்து இழுக்கப்பட்டு கச்சேரி வீதியில் நிறுத்தப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு தேரோட்டம் தொடங்கி சின்ன மாரியம்மன் கோவிலில் நிலை வந்தடைகிறது. இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மனின் திருவீதி உலாவும், இரவு 9.30 மணிக்கு சின்ன மாரியம்மனின் திருவீதி உலாவும் நடக்கிறது.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு கம்பங்களின் ஊர்வலம் நடக்கிறது. இதில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் மற்றும் காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் நடப்பட்டு உள்ள கம்பங்கள் பிடுங்கப்பட்டு முக்கிய வீதியில் வழியாக ஊர்வலமாக சென்று ஆற்றில் விடப்படுகிறது. அப்போது மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுவதால் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வார்கள். வருகிற 3-ந் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News