செய்திகள்

செல்போன் திருட்டு தகராறில் - வடமாநில வாலிபர் அடித்துக்கொலை

Published On 2019-05-21 06:15 GMT   |   Update On 2019-05-21 06:15 GMT
செல்போன் திருட்டு தகராறில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்மிடிப்பூண்டி:

சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற் சாலையில் பீகார் மாநிலம் சிக்கந்தரா மண்டலத்தைச் சேர்ந்த சச்சின்குமார் (வயது 22). தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவர் புது கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவில் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தார்.

அவரது வீட்டின் அருகே ஒடிசாவைச் சேர்ந்த அஜய் உள்பட சில தொழிலாளர்களும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அஜய்யின் செல்போன் திருட்டு போனதாக தெரிகிறது. அதனை பக்கத்து வீட்டில் தங்கி இருந்த வடமாநில வாலிபர் ராஜேஷ் திருடியதாக அஜய் தகராறில் ஈடுபட்டார்.

இதனை அறிந்து சச்சின்குமார் அங்கு வந்தார். அவர் ராஜேசுக்கு ஆதரவாக வாக்குவாதம் செய்தார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த அஜய் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சச்சின் குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடல் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சச்சின்குமார் இறந்தது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அஜய், அவரது நண்பர்கள் அர்ஜுன், ரமித்குமார் உள்பட 7 பேரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News