செய்திகள்
மந்திரி சுரேஷ்குமார்

பள்ளிகள் திறப்பது குறித்து 15-ந் தேதிக்கு பிறகு முடிவு: மந்திரி சுரேஷ்குமார்

Published On 2021-01-13 02:04 GMT   |   Update On 2021-01-13 02:04 GMT
கர்நாடகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து 15-ந் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் சாம்ராஜ்நகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை தொடங்குவது குறித்து 15-ந் தேதிக்கு பிறகு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். பள்ளிகளை திறந்தால் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

உண்டு உறைவிட பள்ளிகளை தொடங்க சமூக நலத்துறை தயாராகி வருகிறது. மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்படும். தனியார் பள்ளி கல்வி கட்டண விஷயத்தில் அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கல்வி கட்டணத்தில் 70 சதவீதம் பெற தயாராக இருப்பதாக தனியார் பள்ளி கூட்டமைப்புகள் கூறியுள்ளன. இந்த விஷயம் பெற்றோரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடி காரணமாக பெற்றோர் கஷ்டத்தில் உள்ளனர். இன்னொருபுறம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்த 2 விஷயத்தையும் கருத்தில் கொண்டு, பள்ளி கல்வித்துறை கமிஷனர், தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு நல்ல முடிவை எடுப்பார்.

பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து முடிவு எடுத்துள்ளோம். அதை ஓரிரு நாளில் அறிவிப்போம். அதாவது 30 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்படும். யாரும் ஆதங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. எந்தெந்த பாடங்கள் குறைக்கப்படும் என்பது குறித்து பள்ளி கல்வித்துறை கமிஷனர் அறிவிப்பார். பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து நான் 170-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி உள்ளேன். தேர்வுக்கு தேவையான காலஅவகாசம் வழங்கப்படும். அதனால் மாணவர்கள் பயப்பட தேவை இல்லை. வித்யாகம திட்டத்தின் கீழ் நடத்தப்படும் வகுப்புகளை நிறுத்தக்கூடாது என்று வலியுறுத்துகிறார்கள்.

இவ்வாறு மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
Tags:    

Similar News