செய்திகள்
ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
ஐதராபாத் பெயர் மாற்றம் தொடர்பான விவகாரத்தை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் கையில் எடுத்துள்ளார்.
ஐதராபாத்:
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று நடந்த பிரச்சாரத்தின்போது ஐதராபாத் பெயர் மாற்றம் தொடர்பாக அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரச்சாரத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:-
ஐதராபாத்தை பாக்யநகர் என பெயர் மாற்ற முடியுமா? என என்னிடம் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஏன் மாற்ற முடியாது? உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பைசாபாத்தை அயோத்தி என்றும், அலகாபாத்தை பிரயாக்ராஜ் என்றும் நாங்கள் பெயர் மாற்றம் செய்தோம். அப்படியிருக்கையில் ஐதராபாத்தை ஏன் பாக்யநகர் என பெயர் மாற்றம் செய்ய முடியாது?
இவ்வாறு அவர் பேசினார்.
ஏற்கனவே 2018ல் நடைபெற்ற தெலுங்கானா சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய யோகி ஆதித்யநாத், ஐதராபாத் பாக்யநகராக பெயர் மாற்றம் செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.