செய்திகள்
திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மூன்று பேர் போலீசாரை கண்டதும் தாங்கள் வைத்திருந்த பையுடன் ஓட்டம் பிடித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த 3 பேரையும் விரட்டி சென்றனர். அவர்களில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் அந்த நபர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 1,300 கிராம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கஞ்சா கடத்தியதாக சென்னை திருமுல்லைவாயல் கணபதி தெருவை சேர்ந்த அழகர்சாமி (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.