செய்திகள்
வாய்மேடு அருகே டீக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு
வாய்மேடு அருகே டீக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாய்மேடு:
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி மலையான் குத்தகை பகுதியை சேர்ந்தவர் தாயுமானவன். இவருடைய மகன் வீரையன் (வயது31). இவர் ஆயக்காரன்புலம் கடைத்தெரு பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு அருகிலுள்ள முருகானந்தம் என்பவரை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மர்ம நபர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி பெட்ரோல் வேண்டும் என வீரையனிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர் தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்ரோலை எடுக்க முயன்ற போது மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வீரையனை வெட்டியும், உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் ஒரு கையில் உள்ள விரல் துண்டாகி கீழே விழுந்தது. படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து டீக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.