செய்திகள்
உத்தரகாண்ட் கனமழை - வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலி
உத்தரகாண்டின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
டேராடூன்:
வட மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கனமழை காரணமாக அணைகளின் நீர்வரத்து அதிகரித்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மழை மற்றும் வெள்ளத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக முன்கூட்டியே பாலங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரை காணவில்லை.
இன்று மட்டும் மழைக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். கடந்த திங்கட்கிழமை 5 பேர் இறந்துள்ளனர் என முதல் மந்திரி புஷ்கர் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மழை மற்றும் வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து பிரதமர் மோடி அம்மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங்கிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். அப்போது மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...உ.பி. சட்டசபை தேர்தலில் 40 சதவீத இடம் பெண்களுக்கு வழங்கப்படும் - பிரியங்கா காந்தி