செய்திகள்

ரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி விசாரணை - தேர்தல் அதிகாரி தகவல்

Published On 2019-04-20 07:42 GMT   |   Update On 2019-04-20 07:42 GMT
தேர்தலில் வாக்குப்பதிவின்போது ரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி  விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார். #SatyabrataSahoo #Rajinikanth
சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வியாழன் அன்று நடந்தது.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார். இந்த தேர்தலில் ரஜினிகாந்த் வாக்களித்தபோது அவருக்கு வலதுகையில் மை வைக்கப்பட்டது சர்ச்சையாகி இருக்கிறது.

தேர்தல் நடைமுறை விதிகளின்படி வாக்களிப்பவரின் இடது கை ஆள் காட்டி விரலில் தான் மை வைக்கப்பட வேண்டும். இடது கை விரலில் காயம் என்றாலோ மை வைக்க முடியாத சூழ்நிலை என்றாலோ அதற்கு அடுத்த விரலில் மை வைக்கப்படவேண்டும். ஒருவேளை இடது கையில் மை வைக்க முடியாதபட்சத்தில் தான் வலது கையில் மை வைக்கப்படவேண்டும்.

ரஜினிகாந்த் வாக்களிக்கும்போது அவருக்கு மை வைத்த அலுவலர் பதற்றத்தில் அவரது வலது கையில் மை வைத்துவிட்டதாக தெரிகிறது. கடந்த 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் நடிகர் அஜித்துக்கு ஆள்காட்டி விரலுக்கு பதிலாக நடுவிரலில் மை வைக்கப்பட்டு விட்டது.

அதை மீடியாவுக்கு முன்னால் காட்டக்கூடாது என்று கையின் நான்கு விரல்களையும் சேர்த்து காண்பித்தார். அதுபோன்ற ஒரு தர்மசங்கடம் ரஜினிக்கும் அவருக்கு மை வைத்த அலுவலருக்கும் ஏற்பட்டுள்ளது.



சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. முன்னணி நடிகர் என்பதால் அலுவலர் பதற்றத்தில் செய்தாரா? இதற்கு எப்படி ரஜினி சம்மதித்தார்? இது விதிமீறலில் வராதா? இது போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த சத்யபிரத சாகு ‘தேர்தல் பணியில் இருந்த ஊழியர்கள், தவறுதலாக ரஜினிகாந்தின் வலது கைவிரலில் அடையாள மையை வைத்திருக்கலாம்.

ரஜினி ஓட்டு போட வரும்போது பத்திரிகையாளர்கள் உள்பட பெருங்கூட்டம் கூடியதால் அவசரத்தில் தேர்தல் அதிகாரி இடது கைவிரலுக்கு பதில் வலது கைவிரலில் மை வைத்திருக்கலாம்.

பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் தவறு செய்தது தொடர்பாக அறிக்கை கேட்கப்படும். மேலும், அதிக ரசிகர்களுடன் வாக்குச்சாவடி மையத்துக்கு ரஜினிகாந்த் வந்ததாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக அறிக்கை கேட்கப்படும்.

அதேபோல் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் ஆகியோர் சிறப்பு விதியின்படி வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது குறித்தும் அறிக்கை கேட்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். #SatyabrataSahoo #Rajinikanth

Tags:    

Similar News