செய்திகள்
8-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே 12 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூர் பச்சாபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (32). கூலி தொழிலாளி. இவர் நாமக்கல் மாவட்டம் மோளகவுண்டன் பாளையத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை திருமணம் செய்து 2 மாதமாக குடும்பம் நடத்தி வருவதாக ஈரோடு சைல்டு லைன் அமைப்புக்கு புகார் வந்தது.
இது குறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பிரியாதேவி சிறுமியிடம் விசாரணை நடத்தி மலையம்பாளையம் போலீசில் லட்சுமணன் மீது புகார் செய்தார்.
புகாரை தொடர்ந்து லட்சுமணன் மீது மலையம் பாளையம் போலீசார் போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி கோபி சப்-ஜெயிலில் லட்சுமணனை அடைத்தனர். பின்னர் போலீசார் மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.