லைஃப்ஸ்டைல்
கோடை காலத்தில் குழந்தைகளை காக்கும் வழிகள்

கோடை காலத்தில் குழந்தைகளை காக்கும் வழிகள்

Published On 2021-05-28 06:36 GMT   |   Update On 2021-05-28 06:36 GMT
கோடையில் குழந்தைகளின் குதூகலத்தை தட்டிப்பறிக்காமல், அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
கொரோனா மீண்டும் பரவத்தொடங்கிவிட்ட இந்த காலகட்டத்தில் கோடை வெயிலும் தன்னுடைய பங்குக்கு வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. குழந்தைகளை பொறுத்தவரை பள்ளி விடுமுறை என்பதால் வெம்மையை பற்றி கவலைப்படாமல் வெயிலோடு விளையாடியும், உறவாடியும் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். கண் இமைக்கும் நேரத்தில் கதவை திறந்து விளையாட ஓடும் அவர்களை வெப்பத்தால் ஏற்படும் சரும பாதிப்புகள் மற்றும் உடல் உபாதைகளிலிருந்து காப்பதே பெற்றோரின் முழுநேர பணியாக இருக்கும்.

கோடையில் குதூகலத்தை தட்டிப்பறிக்காமல், அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 15 அல்லது அதற்கு மேற்ப்பட்ட சன் பாதுகாப்பு காரணி (எஸ்.பி.எஃப்) கொண்ட சன்ஸ்கிரீனை உடலில் வெயில்படும் இடங்களில் தடவிவிட்ட பின்பே வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். இதனால் தீமை ஏற்படுத்தும் புற ஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து அவர்களை காக்கலாம்.

கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு மெல்லி பருத்தி துணிகளையே அணிவிக்க வேண்டும். மேலும் கை, கால்களை முழுவதுமாக மூடிய வண்ணம் இருக்கும் உடைகளை அணிவிப்பது நல்லது. தலைக்கு தொப்பி உபயோகிக்க வேண்டும்.

வெளியே விளையாட செல்லும் குழந்தைகளை காலை 10 மணிக்கு முன்னேயும், மாலை 4 மணிக்கு பின்னேயும் விளையாட அனுமதிக்க வேண்டும். இந்த நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்றே குறைவாக இருக்கும். நிழலில் விளையாடுவதால் வெயிலின் தாக்கம் இருக்காது என்று நினைக்கலாம். ஆனால் நிழல்  இருக்கும் இடங்களில் ஒளி சிதறடிக்கப்பட்டு பிரதிபலிக்கப்படுவதால் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக நிழலில் அமர்ந்தாலும் வெப்பத்தால் சருமமம் பாதிக்கப்படும்.

கோடைக்காலத்தில் குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதை அதிகம் விரும்புவார்கள், எனவே நீச்சல் குளம் மற்றும் பிற நீர்நிலைகளின் அருகில் விளையாடும் குழந்தைகளின் மேல் பெற்றோரின் முழுக்கவனம் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் தொலைபேசியில் பேசுவது பிற பெற்றோர்களுடன் உரையாடலில் ஈடுபடுவது கவனத்தை சிறடிக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.

கோடையில் தான் பூச்சுகள் அதிகமாக படையெடுக்கும். கொசுக்கள், வண்டுகள் போன்றவை குழந்தைகள் விளையாடும் இடங்களில் இருக்க வாய்ப்புண்டு. எனவே விளையாடிவிட்டு வீட்டுக்குள் வந்ததும் சுத்தமாக குளித்து விட்டு உடைகளை மாற்ற வேண்டும். அவர்கள் அணிந்திருக்கும் உடைகளை கழற்றி நன்றாக உதறிய பின்பு துவைக்க போட வேண்டும்.

உடலில் நீரிழப்பை தடுக்கும் வகைளில் அடிக்கடி தண்ணீர் குடிக்க  வலியுறுத்த வேண்டும். இருபது நிமிடத்துக்கு ஒருமுறை தண்ணீர் மோர், பழச்சாறு, இளநீர், பானகம் மற்றும் உடலுக்கு தீங்கு செய்யாத பானங்களை பருக சொல்ல வேண்டும்.

ஓடி ஆடி விளையாடும் போது காயங்கள் ஏறபடலாம் என்பதால் முதலுதவி பெட்டியை அருகிலேயே வைத்திருக்க வேண்டும்.

வெளியே கடைகளுக்கு அழைத்து செல்லும் போது இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் டேங்கின்மீது குழந்தைகளை அமர வைத்து விட்டு செல்வது பூட்டிய காருக்குள் தனியாக இருக்க சொல்வது போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகளை பெற்றோர் கடைப்பிடிப்பதன் மூலம் கோடை வெப்பத்தில் இருந்து குழந்தைகளை காக்கலாம்.
Tags:    

Similar News