செய்திகள்
கோப்பு படம்.

கோட்டூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் தொழிலாளி பலி

Published On 2020-11-02 14:28 GMT   |   Update On 2020-11-02 14:28 GMT
கோட்டூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோட்டூர்:

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே வீராக்கி கிராமத்தில் கணேசன் என்பவருக்கு சொந்தமான வயலில் நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நடவு பணியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 23 பேர் ஈடுபட்டனர். இதில் பள்ளிவர்த்தி அண்ணா நகரை சேர்ந்த ராமையன் மனைவி பொன்னம்மாள் (வயது70), மேலத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி காளியம்மாள் (70) ஆகியோரும் ஈடுபட்டனர். அப்போது நடவு செய்த இடத்தில் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை பொன்னம்மாள், காளியம்மாள் ஆகியோர் எதிர்பாராதவிதமாக மிதித்துவிட்டனர். இதில் மின்சாரம் தாக்கி இருவரும் மயங்கினர்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் பொன்னம்மாள் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள காளியம்மாளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் தொழிலாளி பலியான சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News