செய்திகள்
தடுப்பூசி போட தயங்க வேண்டாம்... நம்பிக்கை அளித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் -தலைவர்கள்
தடுப்பூசி போடுவதில் பொதுமக்களிடையே உள்ள தயக்கம் மற்றும் அச்ச உணர்வை போக்குவதற்காக பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்றது. 2-வது கட்டமாக 60 வயதை எட்டிய அனைவருக்கும், இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கும் கடந்த திங்கட்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர் மோடி தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதேபோல் தடுப்பூசி போடுவதில் பொதுமக்களிடையே உள்ள தயக்கம் மற்றும் அச்ச உணர்வை போக்குவதற்காக பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டெல்லி ராணுவ மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர் பேசிய அவர், வரலாற்றில் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன், தகுதியுள்ள அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஹர்தீப் சிங் புரி மற்றும் அவரது மனைவி லஷ்மி புரி ஆகியோர், உத்தர பிரதேச மாநிலம் கவுஷாம்பியில் உள்ள யஷோதா சூப்பர் ஷ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார்.
சிக்கிம் கவர்னர் கங்கா பிரசாத் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு காங்டாக்கில் உள்ள எஸ்டிஎன்எம் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
மேகாலயா கவர்னர் சத்ய பால் மாலிக் ஷில்லாங்கில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.