செய்திகள்
பகலிரவு டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு - இந்தியா 276/5
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்திய பெண்கள் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார்.
ஓவல்:
இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் கராரா ஓவலில் நடைபெற்று வருகிறது . டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் கேப்டன் மெக் லானிங் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்தியாவின் மந்தனா மற்றும் ஷபாலி வர்மா சிறப்பான தொடக்கம் அமைத்தனர். ஷபாலி வர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்தார் .
இந்தியா 44.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம் பாதியிலே ரத்து செய்யப்பட்டது. மந்தனா அரைசதம் அடித்து 80 ரன்னிலும், பூனம் ரவுத் 16 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர் .
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார். அவர் 127 ரன்னில் ஆட்டமிழந்தார். பூனம் ரவுத் 16 ரன்னிலும், கேப்டன் மிதாலி ராஜ் 30 ரன்னிலும் அவுட்டாகினர். யஸ்திகா பாட்டியா 19 ரன்னில் வெளியேறினார்.
இந்திய அணி 101.5 ஓவரில் 276 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தீப்தி சர்மா 12 ரன்னில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.