வழிபாடு
உற்சவ மூர்த்திகளை படத்தில் காணலாம்.

இன்று மாசி மக தீர்த்தவாரி: புதுவைக்கு வந்த உற்சவ மூர்த்திகள் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2022-02-16 03:57 GMT   |   Update On 2022-02-16 03:57 GMT
மாசி மக தீர்த்தவாரி இன்று நடைபெறுவதையொட்டி உற்சவ மூர்த்திகள் புதுவை வந்தன. வைத்திக்குப்பம் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாசி மகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உற்சவ மூர்த்திகள் வைப்பதற்காக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தீர்த்தவாரி நிகழ்ச்சியில் தமிழகம், புதுவையில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் கொண்டு வரப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது..

எனவே வைத்திக்குப்பம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமரா, ஹெலி கேமரா மூலம் பக்தர்கள் கண்காணிக்கப்பட உள்ளனர்.

இதற்கிடையே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மாலை போலீஸ் சூப்பிரண்டுகள் சுவேதா, சுபம்கோஷ் தலைமையில் முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார், மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர்.

தொடர்ந்து அங்குள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் செஞ்சி ரங்கநாதர், மயிலம் முருகன், மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி, தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் நேற்று இரவு புதுச்சேரி கொண்டு வரப்பட்டன.

உற்சவ மூர்த்திகளுக்கு புதுவை சாரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உற்சவ மூர்த்திகள் புதுவையில் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து இன்று (புதன் கிழமை) காலை வைத்திக் குப்பத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.
Tags:    

Similar News