உள்ளூர் செய்திகள்
தொற்று அறிகுறி உள்ளவர்கள், இம்மையத்திற்கு வந்து மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை மேற்கொள்ளலாம்.
உடுமலை:
கொரோனா தொற்று மூன்றாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புக்குள்ளாகும் மக்கள் மருத்துவமனைகளுக்கு அலைகழிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், பெருந்தொற்று வகைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
உடுமலை நகரப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில், அரசு மருத்துவமனை எதிரே உள்ள மனமகிழ் மன்ற வளாகத்தில், நகர ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், கோவிட் கேர் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் செயல்படத்துவங்கியுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கவுதம், நகர் நல அலுவலர் டாக்டர் கவுரி சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இம்மையத்தில், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
டாக்டர்கள் கூறியதாவது:
தொற்று அறிகுறி உள்ளவர்கள், இம்மையத்திற்கு வந்து மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை மேற்கொள்ளலாம். தொற்று பாதிப்பு தீவிரம் மற்றும் ஆரம்ப அறிகுறி என வகைப்படுத்தப்பட்டு, அரசு மருத்துவமனை, கோவிட் கேர் சென்டர் அல்லது வீட்டுத்தனிமையில் சிகிச்சை பெற, உரிய மருந்துகளுடன் அனுமதிக்கப்படுவர்.
பொதுமக்கள் முகக்கவசம், தனி மனித இடை வெளி கடைபிடித்தால், தொற்று பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இவ்வாறு, தெரிவித்தனர்.