செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அரசின் அறிவிப்புக்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published On 2021-02-26 10:05 GMT   |   Update On 2021-02-26 10:05 GMT
பல்வேறு நெருக்கடிகள், சோதனைகளைத் தாண்டி வெற்றிகரமாக 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை :

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புயல், மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பயிர்க்கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் 75 சதவீத விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது.  விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சொல்லித்தான் நான் ரத்து செய்ததாக பேசி வருகிறார். உண்மைக்கு புறம்பாக பேசிவருகிறார். அரசு அறிவிக்கவுள்ளதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு ஸ்டாலின் அதை அறிவித்துவிடுகிறார். பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் திமுக குரல் கொடுக்கவில்லை, தேர்தல் வந்தால் குரல் கொடுப்பார்கள்.

அரசின் அறிவிப்புக்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. மக்களுக்கு எந்த காலகட்டத்தில் உதவி செய்ய வேண்டுமோ அதை அந்தந்த காலத்தில் செய்கிறோம்.

வளர்ச்சி திட்டங்களுக்கு கடன் வாங்க வேண்டிய அவசியம் இருப்பதால் வாங்கப்படுகிறது. 2011 ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்ததாக மு.க.ஸ்டாலினே தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களும் கடன் வாங்கித்தான் மக்களுக்கு உதவி செய்கின்றன. அனைத்து மாநில அரசுகளும் கடன் வாங்கிதான் நிர்வாகத்தை நடத்தி வருகின்றன. எந்த மாநிலமும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு திட்டங்களை அறிவிப்பதில்லை

பல்வேறு நெருக்கடிகள், சோதனைகளைத் தாண்டி வெற்றிகரமாக 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளேன். இடைத்தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்திருக்கிறோம்.

இயற்கைச் சீற்றங்கள், கொரோனா பாதிப்பு ஆகிய சோதனைகளிலும் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது.

எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதை நிறைவேற்றிக் காட்டும் அரசு அதிமுக அரசு.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News