செய்திகள்
எல்.பி.ஜி. சிலிண்டர் விலை உயர்வுக்கு இது தான் காரணமா?
இந்தியாவில் எல்.பி.ஜி. சிலிண்டர் விலை உயர்வுக்கு இது தான் காரணம் என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்துடன் எல்.பி.ஜி. சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், எல்.பி.ஜி. சிலிண்டர் விலை உயர்வுக்கு மாநில அரசு தான் காரணம் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எல்.பி.ஜி. சிலிண்டருக்கு மத்திய அரசு 5 சதவீதமும், மாநில அரசு 55 சதவீதமும் வரி வசூலிக்கிறது என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த இணைய தேடல்களில் எல்.பி.ஜி. சிலிண்டர் ஜி.எஸ்.டி. பட்டியலில் இருப்பது தெரியவந்துள்ளது. எல்.பி.ஜி. சிலிண்டருக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்கப்பட்டு அவை மத்திய மற்றும் மாநில அரசுகள் சரிபாதியாக பிரித்துக் கொள்கின்றன.
வைரல் பதிவுகளில் உள்ள வரி விவரங்களில் எல்.பி.ஜி. அல்லது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் என எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் எந்த மாநிலத்தின் வரி முறை என்றும் குறிப்பிடப்படவில்லை. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் எல்.பி.ஜி. விலை வேறுபடும்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.