லைஃப்ஸ்டைல்
மன அழுத்தம்

தேவையற்ற சிந்தனைகளால் வரும் மன அழுத்தம்

Published On 2021-09-29 04:27 GMT   |   Update On 2021-09-29 08:49 GMT
மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு மனதை முடிந்தவரை தெளிவாக வைத்திருக்க வேண்டும். தேவையற்ற சிந்தனைகள்தான் மனச்சோர்வுக்கோ, மன நோய்க்கோ வித்திடும்.
ஏதாவதொரு விஷயம் மனதை பாதித்துவிட்டால் அதை பற்றியே சிந்தித்து கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சாதாரணமாக கடந்து போகக்கூடிய விஷயத்தையும் மனதில் போட்டு குழப்பிக்கொண்டே இருப்பார்கள். அந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். அதுவரை அந்த சம்பவங்கள் மனதை விட்டு நீங்காமல் ரணமாக்கிக்கொண்டிருக்கும். ‘இப்படி செய்திருக்கலாமோ?’ ‘அப்படி செய்திருந்தால் சரியாக இருந்திருக்குமோ? அவசரப்பட்டுவிட்டோமோ?’ என சிந்தனையில் மூழ்கி மனதை காயப்படுத்திக்கொண்டிருப்பார்கள்.

மனம் விசித்திரமான குணாதிசயம் கொண்டது. மனதை வருடும் ஏதாவதொரு சம்பவம் நேர்ந்தால் உடனே சிந்திக்க தொடங்கிவிடும். அத்தகைய சூழலில் மனதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கவலையும், சிந்தனையும் மனதை வாட்டிவதைத்துவிடும். மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு மனதை முடிந்தவரை தெளிவாக வைத்திருக்க வேண்டும். தேவையற்ற சிந்தனைகள்தான் மனச்சோர்வுக்கோ, மன நோய்க்கோ வித்திடும். மூளையின் செயல்பாடுகளையும் முடக்கிவிடும். அதனால்தான் மன ஆரோக்கியம் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிகமாக சிந்திப்பது மன நலத்திற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். மன அழுத்தமும், பதற்றமும் உடல் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும்.

மனம் கட்டுப்பாட்டை இழப்பதாக உணரும்போதெல்லாம் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. நன்றாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். அது மனதை அமைதிப்படுத்த உதவும். யோகா, தியானம் செய்யலாம். அமைதியான சூழல் கொண்ட இடத்தில் அமர்ந்து ஓய்வெடுக்கலாம். அப்போது தேவையற்ற சிந்தனை எழுந்தால் வேறு விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். மற்றவர்களுக்கு ஏதாவதொரு நல்ல விஷயத்தை செய்து கொடுக்கலாம். அதனால் அவர் மகிழ்ச்சி அடைந்தால் அது உங்களுக்கும் மன நிறைவை கொடுக்கும். எல்லாம் நன்றாக நடக்கிறது என்பதை புரிந்துகொள்வீர்கள். கவலைப்பட ஒன்றுமில்லை என்பதையும் உணருவீர்கள்.

சிலர் சின்ன விஷயத்திற்கெல்லாம் உடனே பதற்றமடைந்துவிடுவார்கள். நடந்ததையே நினைத்து மிகையாக சிந்திப்பதுதான் அதற்கு காரணம். சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். மனதை ஆழ்ந்த சிந்தனையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் மனம் வேதனைக்குள்ளாகும். அந்த சமயத்தில் ஏதாவதொரு வேலையில் கவனம் செலுத்தலாம். அல்லது வெளியே எங்காவது செல்லலாம். சைக்கிள் ஓட்டி செல்லலாம். நடக்கவும் செய்யலாம். அது மூளையின் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடும்.

மனதில் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும்போது சந்தோஷமான தருணங்களை பற்றி சிந்திப்பது கடினம். ஆனால் குறைந்தபட்சம் முயற்சி செய்து பார்க்கலாம். மன அழுத்தத்திலோ, கவலையிலோ இருக்கும்போது பலவீனங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். வாழ்க்கையில் என்ன சாதித்திருக்கிறீர்கள் என்பதைப்பற்றி ஒரு நொடி சிந்தியுங்கள். அவை சிறிய சாதனைகளாக இருக்கலாம். அதை நினைத்து பார்க்கும்போது நீங்கள் வலிமையானவர், திறமையானவர் என்பதை உணர்ந்து ஆச்சரியப்படுவீர்கள்.

கடந்த காலத்தில் செய்த தவறுகளை தொடர்ந்து நினைவில் வைத்திருந்தால், ஒருபோதும் நிம்மதியாக வாழ முடியாது. அது தொடர்ந்து உங்களை துயரத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கும். மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. பழைய விஷயங்களை மறந்து எதிர்காலத்தை பற்றி சிந்திக்க பழக வேண்டும். அந்த சிந்தனையும் அதிக நேரம் நீடிக்கக்கூடாது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் இயல்பாக இருப்பதுதான் மன நலனுக்கு நல்லது.
Tags:    

Similar News