ஆன்மிகம்
பெருமாள்

பெருமாள் கோவில்களில் மார்கழி மாத பூஜைகள் தொடங்கின

Published On 2020-12-17 04:24 GMT   |   Update On 2020-12-17 04:24 GMT
பெருமாள் கோவில்களில் மார்கழி மாத பூஜைகள் தொடங்கியுள்ளன. திரளான பக்தர்கள் காலை முதல் இரவு வரை தரிசனம் செய்தனர்.
மார்கழி மாதங்களில் அதிகாலையிலேயே நீராடிவிட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்வது சிறப்பானதாகும். இந்த மாதங்களில் வழக்கத்தை விட முன்னதாகவே கோவில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அதன்படி ஆரணி பகுதி பெருமாள் கோவில்களில் மார்கழி மாத பூஜைகள் தொடங்கியுள்ளன.

ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி அதிகாலையிலேயே சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு மகா அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. பஜனை கோஷ்டியினர் அதிகாலையிலேயே திருப்பாவை பாடி பஜனை பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர். திரளான பக்தர்கள் காலை முதல் இரவு வரை தரிசனம் செய்தனர்.

இதேபோல் ஆரணி கொசப்பாளையம் பகுதியில் சீனிவாச பெருமாள் கோவில், தச்சூர் சாலை மற்றும் சத்தியமூர்த்தி சாலையில் உள்ள கோதண்டராமர் கோவில்களிலும் மார்கழி மாத உற்சவத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News