செய்திகள்
கைது

இரிடியம் கலசம் கொடுப்பதாக ரூ.67 லட்சம் மோசடி: சினிமா போட்டோ கிராபர்-நண்பர் கைது

Published On 2021-02-23 10:28 GMT   |   Update On 2021-02-23 10:28 GMT
இரிடியம் கலசம் கொடுப்பதாக ரூ.67 லட்சம் மோசடி செய்த வழக்கில் சினிமா போட்டோ கிராபர், அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:

சென்னை சாலிகிராமம் வேலாயுதம் காலனி மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நியூட்டன். சினிமா போட்டோ கிராபர்.

இவர் தனது நண்பரான ஆடிட்டர் ரகுஜியுடன் சேர்ந்து ‘இரிடியம் கலசம்’ குறைந்த விலைக்கு கொடுப்பதாகவும் அதை வாங்கி விற்றால் பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்றும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடம் ஆசை வார்த்தை கூறினர்.

இதை உண்மை என்று நம்பிய சதீஷ்குமார் தனது நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து இரிடியம் கலசம் வாங்க முடிவு செய்து ரூ.67 லட்சம் பணத்தை நியூட்டனிடம் கொடுத்தார்.

பணத்தை பெற்றுக்கொண்ட நியூட்டனும் ஆடிட்டர் ரகுஜியும் ‘சதுரங்க வேட்டை’ சினிமா பட பாணியில் போலி இரிடியம் கலசத்தை கொடுத்து சதீஷ்குமாரை ஏமாற்றினர். இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து நியூட்டன், அவருடைய நண்பரான ஆடிட்டர் ரகுஜி இருவரையும் காரில் கடத்தி கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டு மிரட்டினர்.

தகவல் அறிந்ததும் விரைந்து செயல்பட்ட விருகம்பாக்கம் போலீசார் சதீஷ்குமார் உள்ளிட்ட 6 பேரை ஸ்ரீபெரும்புதூர் அருகே கைது செய்து நியூட்டன், ரகுஜியை மீட்டனர்.

இதற்கிடையே ரூ.67 லட்சம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நியூட்டன், ரகுஜி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சதீஷ்குமார் மனைவி அம்முல் புகார் அளித்தார்.

விசாரணை நடத்திய போலீசார் மோசடியில் ஈடுபட்ட நியூட்டன், ரகுஜி இருவர் மீதும் 406, 420 ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News